Saturday, June 27, 2009

1973ல் எழுதிய கவிதைகள்-2

உறவும்,பிரிவும்.

 சமூகத்தை எதிர்க்க இயலாதவர்கள் ஏன் காதலிக்கவேண்டும்? தோல்வி உறுதி என்று தெரிந்தும் ஏன் போராடவேண்டும்? அது ஒருவகை சோகம். என் நண்பருடைய இழந்த காதலை வைத்து அவருக்கு நான் எழுதிய கவிதை. 

 முன்னர் : 

பனிக்கட்டி,பாலிலே கலந்த பழக்கூழ் – 
அவள் இதழிலே ஊறும் தேன் நீர்- 
அவள் ஆசையாய் பார்க்கும் பார்வை, 
உன் நாக்கினில் ஐஸ் கிரீம் ஆகும்.

 பறவைக்குச் சிறகு வேண்டும் 
உயிருக்கு உறவு வேண்டும். 
உறவுக்கு அவள்தான் வேண்டும்
அவளென்றால் உன்னில் பாதி! 
பக்கம் அவள் இருந்தால் வேம்பும் இனிப்பென்பாய், 
விலகி அவள் சென்றுவிட்டால்,இனிய கனி கசப்பென்பாய்!
காலம் கருதாமல் உன் தோளில் சாய்ந்திருந்தாள், 
காலம் மாறியதோ ?வசந்தத்தின் பின்னே வந்தது என்ன? 

 பின்னர்: 

செல்வம் மிக உள்ளவனைக் கண்டாள் போலும்; 
காதலும் நட்பாய் மாறி,
நீயொரு அண்ணன் ஆனாய்! 
நினத்தபின் மறப்பதும்,
மறந்த பின் மறுப்பதும் 
உண்மையை மறைப்பதும்,
பெண்டிர் கடனே! 
உன்பக்கம் இல்லை யென்றால் - 
அவள் எதிரியின் பக்கம் தானே! 
ஆதரிக்கப்படாத அன்பு எல்லாம், 
அளவற்ற வெறுப்பாய் மாறும்! 

உறவுக்காய் ஏங்குவது
 இளமைத்தாகம்-
அவள் பிரிவைத் தாங்காது
துடித்துப்போகும். 
வெறுப்பினால் பார்க்கும் பார்வை
வென்னீரை வேரில் ஊற்றும்.

 மற்றவர் கருத்து:

காதலில் தோற்றுவிட்டால், என்ன ஆகும்? 
ஆசைகள்,பாசங்கள் எல்லாம் சாகும். 
அவிழ்ந்த மனம், இலக்கின்றி எங்கோ போகும். 
அங்கும்,இங்கும் காதலைத்தேடித் தோற்கும்.  
நினைவுகளை மறக்கவேண்டும்-இல்லை
நினைவின்றி நிம்மதியாய் இறக்கவேண்டும். 
”வெந்தணலில் வேகா உடம்பு- 
உற்றவர் கண்ணீர் சொட்டிரண்டு பட்டால் வேகும்”!
என்றெல்லாம் மற்றவர்கள் சொல்லலாகும். 

என் கருத்து: 

என்னை நீ கேட்டாயென்றால், 
வாழ்க்கையில் எதுவும் 
வாழ்வைவிடப் பெரிது இல்லை. 
ஒன்றுபோய் ஒன்று வரும்;
காயத்தைக் காலம் ஆற்றும். 

வன்ணத்துப்பூச்சியின், 
வரலாறு அறிந்தவனே, 
நடந்ததை மறந்து, கூட்டை உடைத்து வா,வா. 
புதிதாய் பிறப்பாய்,பழசை மறப்பாய்,
வாழ்வில் சிறப்பாய்! 

சொல்லாத காதலுக்குத் தோல்வி இல்லை, 
பிறவாத கவிதைக்குச் சாவே இல்லை. 
மண்ணுலகில் தேறாத காதல் எல்லாம்
 வின்ணுலகில் சேராதா?
 திருமணங்கள், அங்கேதானே
 நிச்சயக்கப் படுகின்றன !

Tuesday, June 23, 2009

தப்பும்,தவறும்!

                            பல நாட்களாக என்னை உறுத்திகொண்டிருந்த விஷயம் இது. புத்தகங்களில் காணப்படும் அச்சுப்பிழைகளை printer’s devil என்று குறிப்பிடுவது வழக்கம். தட்டச்சு செய்யப்பட்ட கடிதங்கள்,கட்டுரைகள் முதலியவற்றில் காணப்படும் தவறுகள் typographical mistakes எனப்படும். எழுதுபவர் தவறு செய்தாலும் டைபிஸ்ட் தவறு செய்ததாகத்தான் குறிக்கப்படும்!. 

                           அதேபோல் ஒரு அலுவலகத்தில் பெரிய அதிகாரியின் கையெழுத்தில் வெளிவரும் கடிதம்,குறிப்பு.,சுற்றறிக்கை இவற்றில் காணப்படும் தவறுகள் clerical error என்று அழைக்கப்படும்.ஒரு அதிகாரியால் எழுதப்பட்டு அதற்கு மேல் இரண்டு மூன்று அதிகாரிகள் சரிபார்த்து (!) வெளியிடப்படும் அறிக்கைகளில் உள்ள தவறுகளும் அலுவல் உதவியாளரின் தவறுகளாகத்தான் சித்தரிக்கப்படும். ஒரு அலுவலகத்தில் ஒரு தவறான குறிப்பை மேல் அலுவலகத்துக்கு அனுப்பி அங்கே அத்தவறு சுட்டிக்காட்டப்பட்டால் கீழே இருப்பவர்கள் “ it was sent by mistake” என்று பதில் எழுதிவிடுவார்கள். யாருடைய தவறு என்பது அலசப்படாமல் சிதம்பர ரகசியமாகப் பாதுகாக்கப்படும். 

                              செய்த தவறை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையும் அதற்காக வருந்தும் மனப்பாங்கும் அரிதாகிவிட்டது. கூடியவரையில் தவறுகளை மறைத்து சுத்தமாக (clean) காட்டிக்கொள்வதும்,கண்டுபிடிக்கப்பட்டால் அதை அடுத்தவர் தலைமேல் சுமத்துவதும்,பொறுப்பாளியாக்கப்பட்டால் செய்த தவறை நியாயப்படுத்துவது,அதுவும் முடியாதபோது அடுத்தவர் செய்த இதே போன்ற தவறை முன்னுதாரணமாகக்காட்டி தன்னுடைய தவறு ஒன்றுமே இல்லை என்பதாகக்காட்டுவதும் வழக்கமாகிவிட்டது.. கொள்கையை மாற்றிக்கொண்டு யாரிடம் வேண்டுமானாலும் கூட்டு வைத்துக்கொள்வார்கள். அதைக் காலத்தின் கட்டாயம் என்றோ அல்லது, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை,நிரந்தரப் பகைவனும் இல்லை என்றோ சப்பைக்கட்டு கட்டுவார்கள். கூட்டாளிகள் எதிராளிகளாகவும், எதிராளிகள் கூட்டாளிகளாகவும் மாறி மாறி வருவது சந்தர்ப்பவாதம்தான். 

                      தன்னுடைய கூட்டணியை முன்னேற்ற அணியாகவும், எதிரணியைப் பிற்போக்குவாதிகளின் கூட்டம் என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்வார்கள். இதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் எதிரணியினர் பேசிய பேச்சுக்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். சில கொள்கைப்பிரகடனங்கள் சிலகாலத்துக்கு மட்டும் சொந்த நலனுக்காகப் பாராட்டப்படும். பிறகு அதைக் கிடப்பில் போட்டு விடுவார்கள். எல்லாரும் அதை மறந்து விட்டாலும் தங்கள் சுயதேவைக்காக அவற்றைத் தூசு தட்டி எடுத்து அவற்றுக்காக தங்கள் உயிரையும் கொடுக்கத்தயார் என்று முழங்குவார்கள். காலங்கள் மாறும்போது மக்களின் மதிப்பீடுகளும்,நிலைப்பாடுகளும்,கொள்கைப்பிடிப்புகளும் மாறுவது இயற்கை. இதை ஏற்றுக்கொண்டு,தங்கள் முந்தைய நிலைப்பாடு தவறு என்று ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மை இங்கு யாரிடமும் இல்லாமல் போனது பரிதாபம்.

                          மக்களாட்சியில் கட்சித்தொண்டர்களுக்கும் ஊழலில் பங்கு கிடைத்தால் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு “வாழ்க” போடும் மனப்பன்மை வந்துவிட்டது. பொது மக்களும், அரசு அலுவலகங்களிலும், மற்ற இடங்களிலும் காணப்படும், ஒழுங்கீனங்கள், தவறுகள், ஊழல்கள் இவற்றைப் பெரிதாக எண்ணாமல் பேரம் பேசி,குறைந்த செலவில் (லஞ்சம் என்று பொருள் கொள்க) தங்கள் காரியத்தை நிறைவேற்றி தங்கள் சாமர்த்தியத்தை தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்! எனவே தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவை பழக்கவழக்கங்களாகி, பின்னர் நமது கலாசாரமாக மாறும் அவலத்தையும் பார்க்கிறோம். எம் ஜி ஆர் ஒரு படத்தில் ”தவறு என்பது தவறிச் செய்வது,தப்பு என்பது தெரிந்து செய்வது” என்று பாடுவார். இப்போது எல்லோரும் விவரமானவர்கள் . தெரிந்தே, (அடுத்தவர்க்குத் தெரியாமல்!) தப்பு செய்கிறார்கள்.

                                இவை தவறா, தப்பா என்று எனக்குத்தெரியவில்லை. இந்தப்பதிவில் உள்ள பிழைகளுக்கு நான் பயன்படுத்தும் கணினி தான் காரணம். அதற்கும் வயதாகிவிட்டது!