Showing posts with label வர்ணிகா. Show all posts
Showing posts with label வர்ணிகா. Show all posts

Tuesday, February 19, 2019

என் பேத்தி , என் பேத்தி!


குட்டி பாப்பா ,இவ எங்க வீட்டு சுட்டிப் பாப்பா
காலை மடக்கி, நீட்டி, காற்றில், சைக்கிளோட்டுவா
மோனாலிசா போல இவள், புதிராய் சிரிப்பா
தெரிஞ்ச முகம் எட்டிப் போனா, திரும்பி பாப்பா.

முடிந்த வரை ராத்திரியில் முழிச்சி கிடப்பா;
எழுப்பலன்னா, பகலிலேயும் தூங்கி கிடப்பா!
எழுப்பறது பிடிக்கலைன்னா, முறைச்சி பாப்பா;

அம்மா முகம், கண்ணில் பட்டா புன்னகைப்பா!



முத்தம் தர  கன்னம் காட்டும் இந்த பாப்பா,
அவ பேசும்மொழி இன்னுமெனக்கு புரியலப்பா;
காத்திருந்து காத்திருந்து, வந்த பாப்பா- அவ
காட்டும் வித்தை, தினம் தினமும் வேறே அப்பா .

அம்மாவைப் போலென்பார், அத்தையைப் போலென்பார்
மாமாவைப் போலென்பார், பாட்டியைப் போலென்பார்;
யார் போலும் அவளில்லை,அவள் போலே யாருமில்லை;
யாருக்கும் நகல் இல்லை யாரும் இவளுக்கு நிகரில்லை.

ஓய்வில்லை, ஒழிவில்லை, தரைநீச்சல் எப்போதும்
பேச்சுக்கு நாளிருக்கு, அவள் கூச்சல் சங்கீதம்.
இன்னும் சில நாளில் என் பிடிக்கு சிக்க மாட்டாள்
பேச்சுக்குப், பேச்சென்று, தினமொரு கதை சொல்வாள்!

பால் மறவா பாப்பாவே, பல் முளைக்கா சின்னவளே

ஆசைக்கொரு பாப்பாவே, எனக்கே நீ, மகன் மகளே!