Saturday, March 21, 2009

எதற்குப் பொங்கல்

முந்தைய பதிவில் என் நண்பர் எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்துக் கடிதத்துக்கு நான் எழுதிய பதில். கவிதையா, கட்டுரையா இல்லை வெற்றுரையா என்று comments ல் சொல்லவும்.

 மதுரை 09/03/1993

அன்புள்ள லக்‌ஷ்மி காந்தன், 
உன் கடிதம் வந்தது;
 இல்லாத மகிழ்ச்சிக்கு சொல்லாத வாழ்த்தாக! 
ஏது பொங்கல்,எதற்குப் பொங்கல் 
என்ற கேள்வி நல்ல கேள்வி. 
ஓசையின்றி கேட்டதினால்- 
விழவில்லை காதில் பலருக்கு;

வெள்ளையர்கள் ஆட்சி தப்பாட்டம்-
அதை எதிர்த்து விடுதலைப் போராட்டம்! 
அன்றைய எழுச்சி,வீரம், தியாகம்! 
எங்கே போனது,எங்கே போனது? 
 அடிமைப்பட்டால் புத்தி வருமெனில்,
 அடிபட்டால்தான் வேகம் வருமெனில்,
இன்னும் சிலநாள் இருப்போம் இப்படி.
அடிமைப்பட்டு,அடியும் பட்டு. 
மக்கள் உழைக்க மறுக்கின்றார், 
மானம் விற்றுப் பிழைக்கின்றார்.

தம் மொழியை மறந்த மக்கள்-
சுலப வழிதேடி அலைகின்றார். 
ஒற்றுமை இல்லா இக்கூட்டம்,
ஓரணியில் திரண்டால் நலமாகும்;
புதிய தலைமை வந்தாலே 
புதிய எண்ணங்கள் உருவாகும். 
ஓட்டுக்கு அலையும் தலைவர்கள் ஒழிந்தால் 
நாடு உருப்படுமே! 
தன்னலமின்றி உழைத் தாலே தலைமை மிகவும் பலப்படுமே. 

ஆண்டவர் அனைவரும் நல்லவரே, 
ஆள்பவர் எல்லாம் கெட்டவரே! 
அதிகாரம் ஆளைக் கெடுக்கிறது 
ஆங்கிலப் பழமொழி சொல்கிறது.
மாறும் காலம், மாறும் போது மாறவேண்டும் 
மனிதர்களும். தலைமையும் விலக்கல்ல; 
மாறாத எதுவும் மறைந்தே அழியும். 
மாறும் உலகில், மாறா திருப்பது மாற்றமே.
நிலையாமை ஒன்றே நிலையாய் இருப்பது. 
தருணம் இதுவே தலைமையை மாற்ற- 
இளைஞர் பலபேர் இருக்கின்றார்; 
சொன்னால் சுமையை ஏற்கின்றார்! 
நான் கவிஞனும் அல்ல - 
இது நல்ல கவிதையும் அல்ல! 

வீட்டில் எல்லாம் நலம்தானே, 
நாங்கள் அனைவரும் அப்படியே! 
நாட்டை மறந்து சில நாட்கள் 
வீட்டை நினைத்துப் பார்ப்போமா! 
அன்புடன் ராஜசுப்ரமணியன்.

No comments: