Showing posts with label காதல் தோல்வி. Show all posts
Showing posts with label காதல் தோல்வி. Show all posts

Wednesday, March 21, 2018

கனவுக் காதலி.

1
உன்னில் விழுந்தேன்
என்னை  இழந்தேன்- என்
இதயம் புகுந்தாய்- நான்
என்னை மறந்தேன்.
2
காதல் என்பது, இதுதானோ.
கட்டுப்படுவது ஒரு சுகமோ?
காதல் என்பது கற்பனையோ?
கைகளுக்குள்ளே வசப்படுமோ?.
3
என் கேள்விக்கு நீயே பதிலானாய்
என் தேடலுக்கே நீ பொருளானாய்.
இச்சிப்பதே சுகம் என்றிருந்தேன்;
இசைவதும்,இணைவதும், சுகமென்றாய்.
4
என்றும் வசந்தமென இறுமாந்திருந்தேன்;
ஏனென்று சொல்லாமல் விலகிவிட்டாய்.
இழந்தது காதல், இதயத்தில் காயம்;
காலம் கடந்தும், நிற்குது வடுவாய்.
5
மறந்தும் உன்னை நினைக்கவில்லை;
இருந்துமென் கனவில் வருகின்றாய்.
என்ன செய்ய, எண்ணுகிறாய்?
ஏனடி, என்னைக் கொல்கின்றாய் !

Saturday, June 27, 2009

1973ல் எழுதிய கவிதைகள்-2

உறவும்,பிரிவும்.

 சமூகத்தை எதிர்க்க இயலாதவர்கள் ஏன் காதலிக்கவேண்டும்? தோல்வி உறுதி என்று தெரிந்தும் ஏன் போராடவேண்டும்? அது ஒருவகை சோகம். என் நண்பருடைய இழந்த காதலை வைத்து அவருக்கு நான் எழுதிய கவிதை. 

 முன்னர் : 

பனிக்கட்டி,பாலிலே கலந்த பழக்கூழ் – 
அவள் இதழிலே ஊறும் தேன் நீர்- 
அவள் ஆசையாய் பார்க்கும் பார்வை, 
உன் நாக்கினில் ஐஸ் கிரீம் ஆகும்.

 பறவைக்குச் சிறகு வேண்டும் 
உயிருக்கு உறவு வேண்டும். 
உறவுக்கு அவள்தான் வேண்டும்
அவளென்றால் உன்னில் பாதி! 
பக்கம் அவள் இருந்தால் வேம்பும் இனிப்பென்பாய், 
விலகி அவள் சென்றுவிட்டால்,இனிய கனி கசப்பென்பாய்!
காலம் கருதாமல் உன் தோளில் சாய்ந்திருந்தாள், 
காலம் மாறியதோ ?வசந்தத்தின் பின்னே வந்தது என்ன? 

 பின்னர்: 

செல்வம் மிக உள்ளவனைக் கண்டாள் போலும்; 
காதலும் நட்பாய் மாறி,
நீயொரு அண்ணன் ஆனாய்! 
நினத்தபின் மறப்பதும்,
மறந்த பின் மறுப்பதும் 
உண்மையை மறைப்பதும்,
பெண்டிர் கடனே! 
உன்பக்கம் இல்லை யென்றால் - 
அவள் எதிரியின் பக்கம் தானே! 
ஆதரிக்கப்படாத அன்பு எல்லாம், 
அளவற்ற வெறுப்பாய் மாறும்! 

உறவுக்காய் ஏங்குவது
 இளமைத்தாகம்-
அவள் பிரிவைத் தாங்காது
துடித்துப்போகும். 
வெறுப்பினால் பார்க்கும் பார்வை
வென்னீரை வேரில் ஊற்றும்.

 மற்றவர் கருத்து:

காதலில் தோற்றுவிட்டால், என்ன ஆகும்? 
ஆசைகள்,பாசங்கள் எல்லாம் சாகும். 
அவிழ்ந்த மனம், இலக்கின்றி எங்கோ போகும். 
அங்கும்,இங்கும் காதலைத்தேடித் தோற்கும்.  
நினைவுகளை மறக்கவேண்டும்-இல்லை
நினைவின்றி நிம்மதியாய் இறக்கவேண்டும். 
”வெந்தணலில் வேகா உடம்பு- 
உற்றவர் கண்ணீர் சொட்டிரண்டு பட்டால் வேகும்”!
என்றெல்லாம் மற்றவர்கள் சொல்லலாகும். 

என் கருத்து: 

என்னை நீ கேட்டாயென்றால், 
வாழ்க்கையில் எதுவும் 
வாழ்வைவிடப் பெரிது இல்லை. 
ஒன்றுபோய் ஒன்று வரும்;
காயத்தைக் காலம் ஆற்றும். 

வன்ணத்துப்பூச்சியின், 
வரலாறு அறிந்தவனே, 
நடந்ததை மறந்து, கூட்டை உடைத்து வா,வா. 
புதிதாய் பிறப்பாய்,பழசை மறப்பாய்,
வாழ்வில் சிறப்பாய்! 

சொல்லாத காதலுக்குத் தோல்வி இல்லை, 
பிறவாத கவிதைக்குச் சாவே இல்லை. 
மண்ணுலகில் தேறாத காதல் எல்லாம்
 வின்ணுலகில் சேராதா?
 திருமணங்கள், அங்கேதானே
 நிச்சயக்கப் படுகின்றன !