Wednesday, February 25, 2009

காலம்.

காலமோ தொடர்ந்து செல்லும், 
கதை பல தொடர்ந்து சொல்லும், 
ஓய்வின்றி ஓடும்,நடக்கும்- 
நிற்பது போலத்தோன்றும்,
நில்லாதோடும்; 
 துளி நொடிப்பொழுதில் அசையும்- 
காலம் அனைத்தையும் ஆட்டி வைக்கும்.
 இளமையில்,இன்பத்தில் பறக்கும் காலம்; 
முதுமையில், துன்பத்தில் ஊர்ந்து போகும். 
அளவில்லா காலம்,நேரம்- நாட்களாய்,மாதமாய்,
வருடமாய், பல்லாயிரம் ஆண்டாய்; 
முடிவில்லா இந்த வட்டம்,முடிவது போலத்தோன்றும்.
 நிகழ்காலம், இறந்த காலம், வருங்காலம்- என்றெல்லாம் உண்டா என்ன? இறவாத காலம்; பின்னெது இறந்த காலம்? 
நிலைப்படியில் இடித்துக்கொண்டு, 
நிலைப்படி இடித்ததென்று,சொல்லும் உலகம்.
கைநழுவிப் போனதென்று சொல்லக்கூச்சம்-
நாம் மறந்துவிட்ட காலமே இறந்த காலம். 
எது நல்ல நேரமென்று என்னைக்கேட்டால்
இதுவென்று சொல்லுமுன்னே கடந்து போகும்.
இன்னாளில் ஓட்டம் வேகம் பின்னாளில் பயனாகும் ; 
முயற்சி இல்லையென்றால், முயலும் தோற்கும். 
அளப்பரிய காலம் ஆனால் நாம் இருப்பதோ கொஞ்ச காலம்.
காலத்தைக் கடன், வாங்க- கொடுக்க சேமிக்க- இயலாது; 
ஆனாலும்,
இருக்கின்ற காலத்தில் நற்செயல்கள் செய்திட்டால்
காலத்தை வென்று நிற்போம்!

No comments: