Friday, February 13, 2009

கலைந்த கனவுகள்.

(1973-ம் ஆண்டு பிற்பகுதியில் நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்துக்கு பதிலாக அனுப்பியது. அவர் தன்னுடன் படித்த பெண்ணைக் காதலிப்பதாக நினைத்தார். அவளை மணக்க விரும்பி என் கருத்தையும் கேட்டார். நான் அவருக்கு அனுப்பிய பதில் இது. கவிதையா இல்லையா என்று படிப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.) 

ஆருயிர் நண்பனுக்கு, 

அறிந்தது போல் இருந்தாலும் அறியாப்பருவம். 
பாலியல் அறிந்துகொள்ளத் துடிக்கும் பருவம். 
அனுபவம் எனக்குண்டென்று கேட்கிறாயோ?
நான் சூடு கண்ட பூனையென்று அறிவாய் தானே? 
தண்ணிலவை மேகங்கள் மறைக்கப்பார்க்கும் 
நட்புணர்வை மோகங்கள் கொச்சையாக்கும்; 
ஆனாலும் இவையெல்லாம் மறைந்து போகும் 
அறிவென்னும் ஒளி வந்தால் தெளிவுண்டாகும். 
செம்மண்ணில் பெய்கின்ற மழையின் ஈரம் 
செந்நிறத்தைப் பெறுவதுவோ தெரிந்த சேதி;
நன் மனத்தில் பிறக்கின்ற அன்பு தாகம்
நன்செய்யில் பயிர்போல நன்றாய் வளரும். 
 உள்ளத்தில் உறுதி மட்டும் இருந்துவிட்டால் 
உலகெல்லாம் காலுக்கு கீழே காணும். 
துடிக்கின்ற இதயத்தில் உண்மை அன்பு,
அது அழிகின்ற உலகத்தில் அழியாப் பண்பு. 
துள்ளும் இளமையெல்லாம் சிலநாள் பொழுது.
நெஞ்சை அள்ளும் அழகெல்லாம் தேயும்பொழுது. 
ஈன்றவர்க்கு பெற்றகடன் தீர்க்கும் முன்னே-
வேறு பெண்ணைத் தேடுவது சரியா நண்பா ? 
ஓடுகின்ற ஆறெல்லாம் கடலைச்சேரும் – பெண்ணை 
நாடுகின்ற ஆசையெல்லாம் உடலைச்சாரும்.
காதல் பாடுகின்ற பெண்ணுக்கு காட்டும் பரிவில்- பாதியேனும்,
பாடு படுகின்ற பெற்றோர்க்கு உண்டா,இலையா? 
கடல் தோன்றிப்பாய்கின்ற நதியும் உண்டு- 
அது கண் தோன்றிப்பாய்கின்ற கண்ணீர் வெள்ளம். 
கடலவு கண்களிலே வீழ்ந்தபின்னே கரைசேர ஏதுவழி? எண்ணிப்பார்ப்பாய். காதலுக்கு எதிரி நான் இல்லை,காதலிக்கு மட்டும் தான்! 
என் காதல் தோற்றதனால் எனக்குப்பாடம்.
நீ பாடம் கற்பதற்கு நல்ல வாய்ப்பு.
பெண்பாவம் எனக்கெதற்கு? 
மேலும் நீ கற்க என் வாழ்த்துக்கள்!

No comments: