Tuesday, May 12, 2009

1973ல் எழுதிய கவிதைகள் - 1

நான் 1973-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் உடைந்து படுக்கையில் இருந்தபோது நேரிலும் கடிதம் மூலமும் ஆறுதல் சொன்ன நண்பர்களுக்கு நான் சில பதில் கடிதங்களை கவிதை வடிவில் எழுதினேன் .நகல் எடுத்து வைக்கவில்லை. ஆனால் முன் வரைவு (draft copy) சில நாட்களுக்கு முன் கிடைத்தது. அவற்றில் ஒன்று சில மாற்றங்களுடன் கீழே. (இது நண்பர் வடிவேலுவுக்கு எழுதியது)
இலக்கியமும்,இலக்கணமும்.

முட்டையா,கோழியா முதலெது அறிய 
முயன்ற மனிதர் தோல்வி கண்டார். 
இலக்கியம் இலக்கணம் இவற்றிலும் கூட 
முன்னது,பின்னது அறிந்தவர் இல்லை.
 இலக்கு உள்ளது இலக்கியம் – அதில் அழகு சேர்ப்பது 
இலக்கணம் என்பதென் எண்ணம்; 
எனவே இலக்கணம் மீறிய கவிதைகள் உண்டு.
 இங்கு சிலவரி எழுதிட வந்தேன் – 
இதில் இலக்கணமோ,இலக்கியமோ தேடவேண்டாம்

பெண்கள் என்றால் அழகுடன் இருப்பர்; 
அழகு அற்ற பெண்டிரும் உண்டு. 
 உடலின் அழகு,உருவெளித் தோற்றம்; 
பெண்மையின் குண நலன், பேரழகாகும்.
 இலக்கணம் இருந்தால் இனிமை உண்டு; 
இங்கே யாரும் மறுக்கவில்லை- எனினும் 
பொருள் நிறைந்த பாடல் என்றால், 
பொதிந்த அழகு மிக்க உண்டு. 
 உயிரா மானமா என்ற கேள்வி, 
உயிருள்ள வரைக்கும் தானே? 
வாடும் மலருக்கு ,வாசம், வாடா மலருக்கு ஏது? 
தேடும் பொருளுக்கு,விலை யுண்டு; 
யாரும் நாடாப் பொருளுக்கு மதிப்பேது? 

உனக்குப் பிடித்தது உணவாகும், 
எனக்கோ அதுவே விஷமாகும்!
பயணிக்கு,பயணம் கடினம், 
ஓய்ந்தவனுக்கோ ஓய்வும் கடினம்; 
நேசம் இருந்தால் சுமையும் சுகமே, 
பாசம் மறந்தால்,நினைவும் சுமையே! 
குனிந்தவன் எழுதிய குப்பையும் இலக்கியமாகும்
குனியாதான் எழுத்து குப்பைக்குப் போகும்! 

எழுதவந்தது எதையோ,
எழுதுகிறேன் எதைஎதையோ
எழுகின்ற எண்ணங்கள் என்னென்னவோ. 
சொல்ல வந்ததை, சொல்ல வில்லை நானே; 
சொல்லாமலே உனக்கு, விளங்கும் தானே!

No comments: