நான் என்னுடைய நண்பர் ஒருவருக்கு எழுதிய கவிதை வடிவிலான கடிதத்தில் மற்றொரு நண்பர் திரு ஷண்முகத்தை நலன் விசாரித்திருந்தேன். அதைப்படித்துவிட்டு அவர் அது என்னுடைய கவிதையா அல்லது வேறு கவிஞர் எழுதியதை நான் எடுத்தாண்டேனா என்று ஐயம் எழுப்பியிருந்தார்.
அதற்குப்பதிலாக நான் எழுதியது.
Dear boss,
I may have a few weaknesses, but plagiarism is not one of them. Just to prove my point I write some nonsense which no one else will claim as his own.
அன்பு ஷண்முகமே,ஆசைத் திருமுகமே,
முறையாகத் தமிழைநான் படிக்கவில்லை,
முழுதாக எதையும் நான் கற்கவில்லை.
குறைகாண இயலாத குணக் குன்றில்லை
நான் எழுதும் கவிதை,காவிய மில்லை.
என் பாடல் தவறென்றால், பொறுத்திருப்பேன்,
என் தகுதி குறைவென்றால்,சிரித்திருப்பேன்.
இன்னொருவன் என் பாடல் தனது என்றால்
எப்படியும் மறுத்துரைப்பேன்.
உமக்காக ஒரு கடிதம், கவிதை(?) வடிவில்.
காதல், காதல்
யானையைத் தடவிப் பார்த்து,
யானையைப் பற்றிச் சொன்ன
நண்பர்கள் கதையைப் போல-
பொதுவாய்க்
காதலைப் பற்றிச்
சொல்லும் யார்க்கும்,
பார்வைக் கோணத்தில் மாற்றம்;
எனவே ,
ஒரு காதல் போல
இன்னொன்று இல்லை;
காதலன் வேறு,வேறு;
காதலி வேறு,வேறு
தூயவர் துய்க்கும் காதல்வேறு!
காதலென் றறியாது காதலில் வீழ்வோர்,
காதலில் மூழ்கிக்கொண்டு நட்பென்போர்.
உடல் தொடாக் காதலாக,
உள்ளத்தில் பதிவார், சிலர்.
உணர்ச்சிக்கு வடிகாலாக,
உடம்பால் இணைவார் பலர்.
என் காதல்
வான் அளவு உயர்ந்த காதல்
ஊனிலே உறைந்த காதல்.
நான் கொண்ட காதல் பற்றி
சொல்ல இது நேரம் அல்ல;
இருந்தாலும், சில வரிகள்.
பள்ளிப் பருவத்தில் பெண்ணொரு புதிர்,
கல்லூரிக் காலத்தில் கொஞ்சம் வெளிச்சம்.
தெரிந்து கொள்ளும் ஆர்வமன்றி வேறல்ல.
ஏதேதோ எண்ணங்கள்,
ஏக்கங்கள்,
எதிர்பார்ப்புக்கள்,
எஞ்ஞான்றும் உறுத்தல்கள்,
இறுதியில் ஏமாற்றங்கள்.
ப்ளாடோனிக் லவ் என்று போனதினால்,
இன்று
ஃபிரண்டுகள் மட்டும் மிச்சம் !
ப்ராக்டிகல் லவ் என்று போயிருந்தால்,
ப்ரேசியர் அளவேனும் தெரிந்திருக்கும்!
முட்டி நின்று பழகவரும் பெண்மை –
அதை
எட்டி நின்று பார்த்ததுதான் மடமை;
தொட்டுப் பார்க்கவில்லை; பார்த் திருந்தால்
கிட்டும் சுகமெல்லம் நினைவில் நிற்கும்.
எப்படியும் இக் கவிதை
எனதென்று
ஒப்புக்கொள்வீர்;அன்றேல்,
இன்னொன்று
எழுது வேன் நான்!
கீழே உள்ள கவிதை என்னுடைய நண்பர் திரு. லக்ஷ்மி காந்தன் எனக்கு 1993-ம் ஆண்டு பொங்கல் வாழ்த்தாக அனுப்பியது. அவர் நண்பர்கள் அவரை நெருப்புக்கவிஞர் என்று பாராட்டுவார்கள் இக்கவிதையை அவர் அச்சடித்து பொங்கல் வாழ்த்தாக அனுப்பினார். அவர் சென்னையில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியொன்றில் முதுகலை உதவியாளராக பாடம் நடத்தி வந்தார். அவர் என்னுடைய பால்ய நண்பர். நாங்கள் இருவரும் நெய்வேலியில் இருந்தபோது பள்ளியில் வகுப்புத்தோழர்கள்.பின் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நான் விவசாயம் படித்தபோது அவர் விலங்கியல் படித்தார். பின் சென்னைக்கு வந்து முதுகலை மற்றும் M.Ed முடித்து ஆசிரியப்பணியில் சேர்ந்தார். நான் சென்னையில் பணி புரிந்தபோது அடிக்கடி சந்தித்து அளவளாவி வந்தோம். விருந்தோம்பலில் அவரையும் அவர் மனைவியையும் மிஞ்சுவதுகடினம். என் திருமணத்திற்கு முன் ஒரு தீபாவளி யன்று அவர் அழைப்பிற்கிணங்கி நாள் முழுவதும் அவர் வீட்டில் ஒருவராகத்தங்கி பண்டிகை கொண்டாடியதையும் என் திருமணத்திற்கு அவர் மாப்பிள்ளை தோழனாக கூட இருந்து நல்கிய உழைப்பையும்,ஒத்துழைப்பையும் மறக்க இயலாது. என் பணி காரணமாக நான் பல ஊர்களுக்கு மாற்றலாகிச்சென்று மதுரையில் இருந்தபோது இந்த வாழ்த்து வந்தது. இக்கடிதம் வந்து சில மாதங்களில் அவர் உடல் நலமின்றி இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். அச்செய்தி எனக்குத்தாமதமாகத்தான் தெரிந்தது. அச்சமயம் நான் vertigo என்னும் நோய் காரணமாக மருத்துவமனையில் 3 வாரங்கள் இருந்துவிட்டு பணிக்கு திரும்பியிருந்தேன் எனவே அவருடைய நண்பர்கள் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நினைவஞ்சலியில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. எனக்கு வரும் கடிதங்களில் முக்கியமானவற்றை பாதுகாத்துவைக்கும் பழக்கம் உண்டு. இந்த வாழ்த்துக்கடிதமும் அதற்கு நான் கவிதை வடிவில் அனுப்பிய பதில் கடிதமும் என்னுடைய பழங்கணக்கை தணிக்கை செய்தபோது கிடைத்தன.
இக்கவிதையை என் மறைந்த நண்பர் கவிஞர் காந்தன் அவர்கள் நினைவாக இந்த வலையில் பதிக்கிறேன். அவர் தீவிர திமுக உறுப்பினர். இந்த வாழ்த்து வந்தபோது திமுக ஆட்சியில் இல்லை. அப்போதைய அதிமுக ஆட்சியின்மேல் அவருக்கிருந்த கோபத்தை இக்கவிதை காட்டுகிறது.